இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.
அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுப் பிற்பகல், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மருந்து, சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.