கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவுக்குப் பின்னர், நீரிழிவால் பாதிக்கப்படும் போக்கு காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளின் குடும்பத்தில் எவருக்கும் நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் அல்லது அவர்களுக்கு வேறு ஆபத்து காரணிகள் இல்லாவிட்டாலும் நீரிழிவு நோய் வரலாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் டொக்டர் மணில்கா சுமனதிலக குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், வைரஸ் தாக்கி சில மாதங்களுக்குப் பின்னர், நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
நீரிழிவு நோயாளிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது இதயம் உள்ளிட்ட உறுப்புகளுக்குள், ஏனைய நபகளை விட வேகமாக நுழைகிறது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, திடீர் மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக டாக்டர் சுமனதிலக குறிப்பிட்டார்.
எனவே நீரிழிவு நோயாளிகள், வைரஸ் காரணமாக அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.