கொரோனா செய்திகள் – இலங்கையில் தடுப்பூசி அட்டைகளில் புதிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய நடைமுறை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு, தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட காரணங்களால் கால தாமதமாகியுள்ளது.
2002ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வது அவசியமா அல்லது கியூஆர் (QR) குறியீட்டை அறிமுகப்படுத்துவதா போன்ற சில காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
எனவே, கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த மாத இறுதிக்குள் தேவையான நடவடிக்கைகள் நிச்சயமாக இறுதி செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா செய்திகள்