ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எங்கே? பொலிஸார் தீவிர தேடுதலில்


ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எங்கே? பொலிஸார் தீவிர தேடுதலில்

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டத் தளத்தின் மீதான தாக்குதலின் பிரதான சந்தேகநபராகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் விசேட பொலிஸ் குழுக்கள் சோதனை நடத்திய போதிலும் இதுவரை சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நீதிமன்றம் பெயரிட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு குழுவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.