முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும் விவசாயிகள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்த அவர், இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
கொவிட் தொற்றுநோய் இருந்த போதிலும், பல நாடுகள் 2020 – 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவி பெறுவது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழியை முன்வைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அவையொன்றும் இதுவரை நடைபெறவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு பிரச்சினைகளில் உணவுப் பற்றாக்குறையும் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆத்திரமடைந்த மக்கள் கிளர்தெழுந்தால், அது அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் மற்றும் உணவுக் கடன்கள் தொடர்பாக இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையைக் கடன் வாங்குவதோ அல்லது பொருட்களை பெறுவதோ தீர்க்காது எனவும், தற்காலிக நிவாரணம் பெறுவதற்காக கடனில் மசகு எண்ணெய் மற்றும் உணவைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.