திருமண பதிவு தொடர்பில் செய்யப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடு


திருமண பதிவு தொடர்பில் செய்யப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடு

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்திருக்கின்றது.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களை ஓர் இலங்கைப் பிரஜை பதிவுத் திருமணம் செய்வது தொடர்பாகவே இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2022.01.01 முதல் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உடைய ஒருவர் இங்கு இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்வதாயின் தாம் வதியும் நாட்டிலிருந்து தாம் குற்றச் சம்பவம் எதனுடனும் தொடர்புள்ளவர் அல்லர் என அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து உரிய சான்றிதழ் பெற்று வந்து அதனை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கைப் பதிவாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறவேண்டும்.

இதேபோன்று சுகாதார நிலை பற்றிய ஒரு சுய பிரதிக்ஞனையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும் சாதாரண விவாக பதிவாளர்கள் (கிராம திருமண பதிவாளர்கள்) மூலம் பதிவு செய்ய முடியாது.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே திருமண பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.