நாட்டின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கோரும் விவாதம் நிராகரிப்பு!
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த கோரிக்கையை ஆளும் கட்சி நிராகரித்துள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்த விவாதத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விதிமுறைகள் குறித்து நாளை மறுதினம் விவாதம் நடத்தவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நிதிக் குழுவிலும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிலும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என உத்தர லங்கா சபாகயவினால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன்போது, அந்தக் குழுவிற்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அதேவேளை, ஆளும் கட்சியின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் கலந்து கொண்டதுடன், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நாளை விவாதம் நடத்தப்படவுள்ள உத்தரவுகள் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கோரும் விவாதம் நிராகரிப்பு!