நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா கூட்டங்களில் ஆற்றிய உரைகள் மற்றும் கருத்துக்களை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக, இந்தியாவைச் சேர்ந்த நித்தியானந்தா உருவாக்கியதாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கைலாசா என்ற சர்ச்சைக்குரிய தேசத்தின் பிரதிநிதிகள் சிலர் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.
இதுவரை எங்கு இருக்கின்றது என்றே தெரியாமல் இருந்த கைலாசாவின் பிரதிநிதிகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்ற காட்சிகள் பரவலான கவனத்தை ஈர்த்தமையே இதற்கான காரணமாகும்.
இதனால், தங்களை ஐ.நா அங்கீகரித்து விட்டது போல நித்தியானந்தாவின் சீடர்கள் என அழைத்துக் கொள்ளும் அந்த பிரதிநிதிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் ஒரு கற்பனையான நாட்டின் பிரதிநிதி பதிவு செய்த வார்த்தைகளை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
ஐ.நா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும் கைலாசா பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா (யுஎஸ்கே) பிரதிநிதிகள் பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் இரண்டு ஐ.நா கூட்டங்களில் கலந்து கொண்டனர்” என்று கூறியுள்ளார்.
முதலாவது கூட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பெப்ரவரி 22ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகும்.
அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டம், பெரவரி 24ஆம் திகதி பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு (CESCR) நடத்திய நிலையான வளர்ச்சி குறித்ததாகும்.
“பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்” என்று இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.
CEDAW கூட்டத்தில் யு.எஸ்.கே வழங்கிய எழுத்துபூர்வ அறிக்கை “பொது விவாத தலைப்புக்கு பொருத்தமற்றது” என்பதால் அவர்களின் கருத்துகள் அறிக்கையில் சேர்க்கப்படாது என்று குவோக் மேலும் கூறினார்.
இரண்டாவது கலந்துரையாடலில் யுஎஸ்கே பிரதிநிதி ஒருவரின் கூற்று, நிகழ்ச்சிக்கும் தலைப்புக்கும் எட்டாத வகையில் இருந்ததால் அதுவும் கவனத்தில் கொள்ளப்படாது என்றும் குவோக் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐ.நா கூட்டத்தில் கலந்து கொண்ட கைலாசா பிரதிநிதியான விஜயப்ரியா நித்தியானந்தா, சுவாமி நித்யானந்த பரமசிவம் அவர் பிறந்த இடத்தில் சில இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்பட்டார் என்றே நான் கூறினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கைலாசா, இந்தியாவை மிக உயர்வாகக் கருதுகிறது என்றும் இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது என்றும் குறிப்பிட்டு காணொளியொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கமிட்டியின் கூட்டம் ஒன்றில் கைலாசாவின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட புகைப்படங்களை கைலாசா என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதன்மூலம் கைலாசாவை ஐநா அங்கீகரித்துவிட்டது என்றும் கூறப்பட்டது.
ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கமிட்டியின் கூட்டம் குறித்தான ஐநாவின் அதிகாரப்பூர்வக் காணொளியில், கைலாசாவின் பிரதிநிதி என்று கூறும் ஒருவர் பேசியதை பார்க்க முடிகிறது.
அவர், “நான் இங்கு கைலாசாவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொள்கிறேன்.
நான் ஐநாவுக்கான நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்தியானந்தா, கைலாசா என்பது இந்துக்களுக்கான முதல் இறையாண்மை நாடு. இந்துக்களின் உயரிய தலைவர் நித்தியானந்த பரமசிவத்தால் நிறுவப்பட்டது கைலாசா” என்று தெரிவித்தார்.
“இந்து மதத்தின் பழமையான பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்காக நித்தியானந்தா துன்புறுத்தல்களை அனுபவிக்கிறார். அவர் போதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தான் பிறந்த நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
ஐநாவின் இந்த கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் பெயரில் கைலாசா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் ஐநாவின் 193 நாடுகளின் பட்டியலில் கைலாசா நிச்சயம் இல்லை.
அதேபோல ஐநாவின் சில கிளை அமைப்புகளின் கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நாட்டின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!
- பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி
- imfக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
- இந்தியாவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அலி சப்ரி!
- 24 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்!
- சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ரகசிய விஜயம் – இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
- கச்சதீவு வருடாந்த உற்சவம் கோலாகலமாக ஆரம்பம்!
- கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ரணில் தொலைக் காணொளி கலந்துரையாடல்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை