இன்று முதல் சந்தையில் வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கு புதிய முத்திரையை அறிமுகப்படுத்த இரண்டு உள்ளூர் எரிவாயு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்பபடி, லிட்ரோ நிறுவனம் வெள்ளை பின்னணி சிவப்பு நிறத்தையும், லாஃப்ஸ் நிறுவனம் மஞ்சள் பின்னணி பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
நாட்டில் அதிகளவான எரிவாயு விபத்துக்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தையில் வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களில் முறையான விவரக்குறிப்புகளுக்கு இணங்க இந்த புதிய முத்திரை இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை நாடு முழுவதும் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீபற்றுகின்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 28ம் திகதி வரையான நாடு முழுவதும் 28 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனினும், கடந்த 29ம் திகதி முதல் நேற்று முன்தினம் (05) வரையான ஒரு வார காலத்தில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.