நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை வந்தடையவுள்ளது.
அதில் 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதில் இதுவரையில் 1,000 மெற்றிக் டன் எரிவாயு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் 120,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் நேற்றும் இன்றும் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த கப்பலில் உள்ள எரிவாயு எதிர்வரும் 2 நாட்களுக்கு போதுமானதானதெனவும் நாளை நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நேற்றைய தினமும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.