ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர, இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இன்றைய நாளில் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெறும்.
இதன்போது நேற்று கலந்துரையாடிய விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதன்பின்னர் இந்த அறிக்கை தொடர்பான கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஏப்ரல்21 தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.