மூன்று நாட்களாக கதறி அழுத பாத்திமா பரிதாபமாக பலியான சம்பவம்
தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மீகஹவத்தை – தெல்கொட – கந்துபொட பகுதியில் பதிவாகியுள்ளது.
மீகஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மத சடங்கொன்றின் போது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் மத சடங்கினை மேற்கொண்ட பெண் இன்று (01) மஹர நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மத சடங்கினை மேற்கொண்ட பெண் குறித்த சிறுமியை பிரம்பால் அடித்துள்ள நிலையில் தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) ராகமை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது,
ஐயையோ, ஐயையோ அன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்லமுடியாது என்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம் என்றனர்.
எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால், அச்சிறுமி கதறுவது எங்களுக்கு கேட்கும், மற்றுமொரு வீடும் அப்பெண்ணுக்கு உள்ளது. அந்த வீட்டுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அடித்துள்ளார் என்றனர்.
பேயோட்டுவதாகக் கூறி, ஒன்பது வயதான சிறுமியைப் பிரம்பால் அடித்தமையால் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பில், பிரதேசவாசிகள் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்
இறுதியாகப் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவித்தோம். பொலிஸார் வருவதற்கு முன்னரே, அச்சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு, அப்பெண் புறப்பட்டாள்.
அந்தச் சிறுமிக்கு என்ன, காய்ச்சலா அல்லது டெங்கா என விசாரித்தோம்.
எனினும், எவ்விதமான பதிலையும் சொல்லாத அப்பெண், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், அச்சிறுமியின் உடலில், பிரம்பால் அடித்திருந்தமைக்கான தழும்புகள் இருந்தன.